Thursday, June 23, 2005

எழுதி முடிக்கப்படாமல் போன சிறுகதை

பத்து ரூபா.

இந்தத் தலைப்பில் ஒரு சிறுகதை (கிறுக்கலாய்) எழுதி வைச்சிருந்தேன் 6 வருடங்களுக்கு முன்பு. அதனை மெருகேற்ற வேண்டும் என்று எண்ணி அது நிறைவேறாமலே போய் விட்டது.

அந்தக் கிறுக்கலை இப்போது காணவில்லை. இன்னும் ஒருக்கா வடிவா தேடிப் பார்க்க வேண்டும். சிறுகதையில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லாமல் போனதும் தொலைந்தமைக்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறன்.

பத்து ரூபா என்பதுதான் அக்கதையின் தலைப்பு.

பத்து ரூபா.

இது ஒரு தமிழ் ஆசிரியரின் கதை. நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த தமிழ் ஆசான் அவர். ஒருநாள் அவரது பாதையில் ஒரு பத்துரூபாத்தாள் கேட்பாரற்றுக் கிடந்தது. அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அதனை தனது சட்டைப்பையினுள் போட்டுக் கொண்டார்.

ஆனால், அவர் வீடு வந்ததும் குற்ற உணர்ச்சி அவரைப் பிய்த்துத் தின்றது. ஊருக்கு உபதேசம் செய்யும் தானே இப்படியான ஒரு செயலை எப்படிச் செய்யலாம் என்று அவருள் கேள்வி எழுந்தது.

மறுநாள் மற்றவர்கள் எல்லாம் இவரினைச் சுட்டி எள்ளி நகையாடுவது போல இவர் உணர்கின்றார்.

...
...

இப்படியான வதைகளின் பின் ஓடோடி வீடு வரும் அவர் அந்தப் பத்து ரூபாவை பிள்ளையார் கோவில் உண்டியலில் போட முடிவு செய்கின்றார்.
கோவிலுக்குப் போய் பையினுள் கையை வைச்சால் அங்கு அந்தப் பத்து ரூபாவைக் காணவில்லை.

வந்த வழியே அவர் திரும்ப பதறிக்கொண்டு ஓடுகின்றார். அங்கு ஒருவன் குனிந்து எதையோ எடுக்கின்றான். அது அது... அது அவர் எடுத்த பத்து ரூபா.

இவர் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். தான் பட்ட மன உளைச்சலை இப்ப இந்த ஒருவன் படப் போகின்றானே என்று. பாதையால் போவோர் இவரை விசித்திரமாய்ப் பார்த்துச் செல்கின்றார்கள்.

...................................................
இதுதான் கதை. எழுதி முடிக்கப்படாத எனது 2ஆவது அல்லது 3ஆவது சிறுகதை.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, June 21, 2005

நாய் கடிக்கும் கவனம் (பகுதி 2)

செல்லமக்காவீட்டு நாய்க்குட்டிக்கு சோறு போட்டால் எப்படிச் சிரிக்குமோ அப்படி அவள் சிரித்தாள்.


நாய் ஒன்று அமைதியில்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. ஓ அதுவும் நான் தேடுமாற்போல் யாரையோ தேடுகின்றதோ? கேட்க நா துடித்தது. அதன் கூரிய பற்களைப் பார்த்த பின்பு என் முடிவினை மாற்றிக்கொண்டேன். பிறகொருநாள் அதன் பல்லெல்லாம் கொட்டுப் பட்ட பின்னர் கேட்கலாம் என்று எனது மனசைச் சமாதானப்படுத்திக் கொண்டேன்.

..........
பகுதி ஒன்றுக்கு இங்கே செல்க.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, June 20, 2005

அந்நியன் ஆனேனே

இரண்டு கல்யாணங்களுக்குப் போய் நன்றாய் உண்டுங் கண்டும் வீடு திரும்பும் போது அந்நியன் படம் பார்க்க நண்பர்கள் திட்டமிட்டார்கள்.

எனக்கு ஒரே அசதியாய் இருந்தது. படம் பார்க்கவே அன்று விருப்பம் இருக்கவில்லை. அதனைவிட நானொரு கஞ்சன். அநியாயமாய் ஒரு படத்திற்கு 15$ செலவழிக்க நானொருபோதும் விரும்பேன்.

10$ தான் இம்முறை என்று நண்பன் சொன்னபோது மறுப்பேதும் சொல்லமுடியவில்லை.

ஒரு திரையரங்கிற்குப் போனால் அங்கு house fullஆம். சரியென்றுவிட்டு இன்னொரு திரையரங்கிற்கு பெருந்தெரு ஊடாகப் பயணஞ் செய்து போயாகிவிட்டது.

அங்கு இருக்கைகளுக்கு இலக்கம் இல்லை. யாரும் எங்கும் இருக்கலாம். வெளியில் பார்வையாளார்களை வரிசையாக நிற்க வைக்கக்கூட அந்தப் புண்ணியவான்கள் முயற்சி செய்யவில்லை.

ஒருவாறு முண்டியடித்துப் படம் பார்க்க இருந்தாயிற்று.

அந்தத் திரையரங்கின் ஒலியமைப்பு சரியான கேவலம். ஒலியினளவைக் கூட்டி விட்டிருந்தார்கள். நானொன்றும் பாதி செவிடில்லை என்று சொல்லி திரையரங்கின் உரிமையாளரின் பிடரியில் ஒரு சாத்து சாத்த முடியாதா என்று மனசு வன்முறையாய்ச் சிந்திச்சது.

ச்சை...அஞ்சு சதத்துக்கு உதவாத ஒரு திரைப்படத்திற்காக நானேன் வன்முறையாய்ச் சிந்திப்பான். என்னிலேயே எனக்கு வெட்கம் எழுந்தது. பக்கத்தில் இருக்கும் தோழன் சொன்னான் "perfect volume" என்று. ஒருவேளை என்னில்தான் பிழையோ?

எப்படா படம் முடியும் என்றிருந்தது. ஒரு கட்டத்தில் வெளியே போய் நண்பர்கள் படம் பார்த்து முடியும் வரை காத்திருக்கலாமோ என்றும் யோசித்தேன். அவர்களது இன்பத்தை நான் ஏன் குலைப்பான் என்றுவிட்டு அமைதியாய் படம் பார்த்தேன்.

படம் முடிந்து வெளியே வரும்போது முடிவு செய்தேன். இனி திரையரங்கிற்குச் சென்று தமிழ்ப்படம் பார்க்ககூடாது.

அதனைவிட முக்கியமாய் என்னுள் ஒரு கேள்வியெழுந்தது. ஏன் என்னால் என் நண்பர்களைப்போலிருக்க முடியவில்லை? நான் ஏன் அந்நியனானேன்?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
statistics