எழுதி முடிக்கப்படாமல் போன சிறுகதை
பத்து ரூபா.
இந்தத் தலைப்பில் ஒரு சிறுகதை (கிறுக்கலாய்) எழுதி வைச்சிருந்தேன் 6 வருடங்களுக்கு முன்பு. அதனை மெருகேற்ற வேண்டும் என்று எண்ணி அது நிறைவேறாமலே போய் விட்டது.
அந்தக் கிறுக்கலை இப்போது காணவில்லை. இன்னும் ஒருக்கா வடிவா தேடிப் பார்க்க வேண்டும். சிறுகதையில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லாமல் போனதும் தொலைந்தமைக்கு ஒரு காரணமாக இருக்கும் என்று நினைக்கிறன்.
பத்து ரூபா என்பதுதான் அக்கதையின் தலைப்பு.
பத்து ரூபா.
இது ஒரு தமிழ் ஆசிரியரின் கதை. நேர்மையும் கண்டிப்பும் நிறைந்த தமிழ் ஆசான் அவர். ஒருநாள் அவரது பாதையில் ஒரு பத்துரூபாத்தாள் கேட்பாரற்றுக் கிடந்தது. அக்கம்பக்கம் பார்த்துவிட்டு அதனை தனது சட்டைப்பையினுள் போட்டுக் கொண்டார்.
ஆனால், அவர் வீடு வந்ததும் குற்ற உணர்ச்சி அவரைப் பிய்த்துத் தின்றது. ஊருக்கு உபதேசம் செய்யும் தானே இப்படியான ஒரு செயலை எப்படிச் செய்யலாம் என்று அவருள் கேள்வி எழுந்தது.
மறுநாள் மற்றவர்கள் எல்லாம் இவரினைச் சுட்டி எள்ளி நகையாடுவது போல இவர் உணர்கின்றார்.
...
...
இப்படியான வதைகளின் பின் ஓடோடி வீடு வரும் அவர் அந்தப் பத்து ரூபாவை பிள்ளையார் கோவில் உண்டியலில் போட முடிவு செய்கின்றார்.
கோவிலுக்குப் போய் பையினுள் கையை வைச்சால் அங்கு அந்தப் பத்து ரூபாவைக் காணவில்லை.
வந்த வழியே அவர் திரும்ப பதறிக்கொண்டு ஓடுகின்றார். அங்கு ஒருவன் குனிந்து எதையோ எடுக்கின்றான். அது அது... அது அவர் எடுத்த பத்து ரூபா.
இவர் கெக்கட்டம் விட்டுச் சிரித்தார். தான் பட்ட மன உளைச்சலை இப்ப இந்த ஒருவன் படப் போகின்றானே என்று. பாதையால் போவோர் இவரை விசித்திரமாய்ப் பார்த்துச் செல்கின்றார்கள்.
...................................................
இதுதான் கதை. எழுதி முடிக்கப்படாத எனது 2ஆவது அல்லது 3ஆவது சிறுகதை.